பத்திரிகைகள் என்பது செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு மட்டுமல்ல; கொள்கைகளைப் பரப்புவதற்கும் பயன்பட்டு வருகிறது.
அந்த வகையில், திராவிடர் இயக்கக் கொள்கைகளைப் பரப்பும் ஏடாக நீதிக்கட்சியின் ‘திராவிடன்’ முதலில் பவனி வந்தது.
Justice என்ற ஆங்கில ஏட்டின் தமிழ்ப்பெயரால்தான், தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற நம் தாய் அமைப்பு நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்டது.
நீதிக்கட்சியின் நீட்சியான நம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அதிகாரப்பூர்வ வார ஏடாக ‘சங்கொலி’ இதழ் 30 ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களுக்கிடையில் வீறுநடை போட்டு பயணம் தொடர்கிறது.
நெடுங்காலமாக அரசு நூலகங்களில் நம் ‘சங்கொலி’ இடம்பெறுவதில்லை என்ற குறையை நிவர்த்தி செய்யுமாறு வேண்டிய நம் இயக்கத் தலைவர் வைகோ அவர்களின் கடிதத்தை கடந்த ஆட்சியின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் மூன்று முறை நேரில் சந்தித்து அளித்து வற்புறுத்தினேன். இதன் விளைவாக ஒருசில நூலகங்களில் மட்டும் ‘சங்கொலி’ இடம்பெற வாய்ப்பளித்தனர்.
தற்போது நடைபெறும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், அனைத்து நூலகங்களிலும் ‘சங்கொலி’ இடம்பெறச் செய்வோம் என்று அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் அறிவித்திருப்பது நமக்கு தேனினும் இனிக்கிறது.
‘சங்கொலி’யின் 30ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படும் வேளையில் மேற்கொண்ட இந்த அறிவிப்புக்காக, தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றி!
நூற்றாண்டு காணட்டும் ‘சங்கொலி’!








