05.08.2026 அன்று மாண்புமிகு ஒன்றிய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை புது டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து, தனது திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் நீண்டகால ரயில்வே கோரிக்கைகள் மற்றும் மத்திய தமிழ் நாட்டின் ரயில்வே இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஆறு முக்கிய கோரிக்கை மனுக்களை துரை வைகோ எம்.பி., வழங்கினார்.
முதலாவதாக, 07355/07356 ஹூப்ளி - இராமேஸ்வரம் சிறப்பு விரைவு ரயில் மற்றும் 06243/06244 மைசூர் - காரைக்குடி சிறப்பு விரைவு ரயில் ஆகியவை தொடர்ந்து அதிக பயணிகள் பயன்பாட்டைப் பெற்று வருவதால், அவற்றை நிரந்தர ரயில் சேவைகளாக மாற்றுமாறு கோரிக்கை வைத்தார்.
இரண்டாவதாக, மத்திய தமிழ்நாட்டிற்கும் தெற்கு கர்நாடகாவிற்கும் இடையேயான நேரடி இரவு நேர ரயில் இணைப்பை ஏற்படுத்தும் வகையில், திருச்சிராப்பள்ளி - சாம்ராஜ்நகர் இரவு நேர விரைவு ரயிலை அறிமுகப்படுத்துமாறு வலியுறுத்தினார்.
மூன்றாவதாக, சமீபத்தில் நிரந்தர சேவையாக மாற்றப்பட்ட 17077/17078 திருச்சிராப்பள்ளி - சார்லப்பள்ளி விரைவு ரயிலை வாராந்திரச் சேவையிலிருந்து தினசரி (Daily) அதிவிரைவு ரயிலாக இயக்க கேட்டுக்கொண்டார்.
நான்காவதாக, இந்திய ரயில்வேயின் Vision 2030 திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ரயில்கள் புறப்படும் (Train Originating Capacity) திறனை இரட்டிப்பாக்கும் திட்டத்தில் திருச்சிராப்பள்ளியையும் இணைத்து, கூடுதல் நடைமேடைகள், பராமரிப்பு வசதிகள் மற்றும் முனைய உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கெனவே அவர் கடந்த 04.02.2026 மற்றும் 26.05.2026 அன்று கோரிக்கை விடுத்ததையும், அமைச்சர் அவர்கள் அந்த நகரங்களின் பட்டியலில் திருச்சியையும் சேர்ப்பதாக உறுதியளித்ததையும் நினைவுபடுத்தினார். திருச்சியை அந்த பட்டியலில் இணைக்க ஏற்கெனவே உத்தரவிட்டுள்ள தகவலையும், உறுதியாக பட்டியலில் திருச்சி இருக்கும் என்ற தகவலையும் ரயில்வே அமைச்சர் துரை வைகோவிடம் தெரிவித்தார்.
ஐந்தாவதாக, 09125/09126 கான்பூர் - மதுரை சிறப்பு ரயிலை, கரூர் - திண்டுக்கல் வழித்தடத்திற்கு பதிலாக திருச்சிராப்பள்ளி வழியாக நிரந்தரமாக இயக்கி, திருச்சிராப்பள்ளி சந்திப்பில் நிறுத்தம் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த ரயில் முன்னர் கான்பூர் - திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டபோது பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்ததையும் எடுத்துரைத்தார்.
ஆறாவதாக, புதுக்கோட்டை, காரைக்குடி, அருப்புக்கோட்டை வழியாக திருச்சிராப்பள்ளி - திருச்செந்தூர் தினசரி பகல் நேர இன்டர்சிட்டி விரைவு ரயிலை அறிமுகப்படுத்துமாறும் வலியுறுத்தினார். இந்த ரயில் சேவை மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என்பதையும் துரை வைகோ எம்.பி., எடுத்துரைத்தார்.
மேற்கண்ட அனைத்து கோரிக்கைகளையும் மாண்புமிகு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அவர்கள் கவனத்துடன் கேட்டறிந்து, உரிய பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.







