இமைப்பொழுதும் நீங்காது என் இதயத் துடிப்போடும் இரத்தச் சுழற்சியோடும் கலந்துவிட்ட கண்ணின் மணிகளே!
“கழகத்தை நான் வெறும் அரசியல் கட்சியாக கருதுபவன் அல்லன்... கழகம் ஓர் குடும்பம். இந்தப் பாச உணர்ச்சி தான் நமக்கு வலிவும் பொலிவும் தருகிறது” காஞ்சி ஏட்டில் (19.09.1965) அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய மடலில் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறார்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் இலட்சியக் கனவுகளைக் சுமந்து கொண்டு கடந்த 32 ஆண்டுகளாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை ஓர் குடும்பமாக நாம் நடத்தி வருகிறோம். பேரறிஞர் அண்ணா காண விரும்பிய மறுமலர்ச்சி தமிழகம் காண்பதற்கு கழகம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
அதனால்தான் கழகம் தொடங்கிய நாளிலிருந்து ஆண்டுதோறும் அண்ணாவின் பிறந்த நாளை எழுச்சிகரமாக கொண்டாடி வருகிறோம்.
திராவிட இயக்கத்தின் வரலாற்றில் இந்திய நாட்டின் புகழ்மிக்க தலைவர்களை அழைத்து வந்து பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் பங்கேற்க செய்து, அண்ணாவின் புகழை ஓங்கிட செய்த பெருமை மறுமலர்ச்சி திமுகவுக்கு மட்டுமே உண்டு.
1998 செப்டம்பர் 15 - அண்ணா பிறந்த நாளில் சென்னையில் மறுமலர்ச்சி பேரணி நடத்தி, அதில் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பங்கேற்று அண்ணா அவர்களின் பெருமையைப் பேசி நாடே வியந்து கேட்கச் செய்தோம்.
அதுமட்டுமா? எல்.கே.அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், டாக்டர் பரூக் அப்துல்லா, பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவின் சிறப்புகளை எடுத்துக் கூறினர்.
இந்த மறுமலர்ச்சி பேரணியில்தான் நான் வைத்த கோரிக்கையை ஏற்று, சேது கால்வாய் திட்டத்தை இந்திய அரசு நிறைவேற்றும் என்று பிரதமர் வாஜ்பாய் அவர்கள் அறிவித்தார்.
தமிழ்நாட்டின் நலனுக்காக மறுமலர்ச்சி திமுக அளவுக்குப் போராடிய இன்னொரு இயக்கத்தை காண முடியாது. இதுதான் நமக்கு இருக்கக்கூடிய வலிமை ஆகும்.
எனவேதான், அண்ணாவின் பிறந்தநாளை பேரணியாக, பொதுக்கூட்டமாக, கருத்தரங்கமாக, மாநாடாக தொடர்ந்து அண்ணா பிறந்த அதே செப்டம்பர் 15 ஆம் நாளில் நாம் நடத்தி வருகிறோம்.
அண்ணாவின் நூற்றாண்டு தொடக்க விழா மாநாட்டை 2008 ஆம் ஆண்டு மதுரையிலும், நிறைவு விழாவை மாநாடாக 2009இல் திருச்சியிலும் சிறப்பாக நடத்தினோம்.
கடந்தாண்டு திருச்சியில் நமது முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., அவர்களின் மேற்பார்வையில் வெற்றிகரமாக அண்ணாவின் 117 ஆவது பிறந்தநாள் மாநாடு நடந்தது.
இந்த ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் 118 ஆவது பிறந்தநாள் விழாவை செப்டம்பர் 15 ஆம் நாள் வள்ளுவர் கோட்டத்தில் நடத்துகிறோம்.
மாலை 3 மணிக்கு தொடங்க இருக்கும் அண்ணா பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்கு இப்பொழுதே ஆயத்தமாகுங்கள்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புலிகளுக்கு தோள் கொடுத்தவரும், தமிழீழம் மலர்ந்தால் அரசியல் அமைப்புச் சட்டத்தை வரைவு செய்து மாவீரர் திலகம் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களிடம் அளித்தவருமான, மலேசிய நாட்டின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதலமைச்சர் திரு ராமசாமி அவர்கள் அண்ணா பிறந்தநாள் விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசுகிறார்.
இந்த விழாவில் உங்களுக்கெல்லாம் ஏன்? உலகம் முழுவதும் பரவி வாழ்கிற தமிழ் பெருமக்களுக்கும் மகிழ்ச்சியும் எழுச்சியும் ஊட்டக்கூடிய ஒன்றை வழங்கிட இருக்கின்றேன்.
அண்ணா பிறந்தநாள் விழாவுக்கு வாருங்கள் நேரில் அதன் சிறப்பை காணுங்கள் என்று வற்றாத பேரன்பால் கழக கண்ணின் மணிகளை வருக! வருக!! என்று அழைக்கின்றேன்.
வள்ளுவர் கோட்டம் நிறைந்தது; என் மனம் குளிர்ந்தது! என்னும் நிலையை நீங்கள் தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு என்றைக்கும் உண்டு.
அந்த நம்பிக்கையில்தான் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி புதுடெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடந்த ‘நாடாளுமன்றத்தில் வைகோ (Vaiko in Parliament)’ நூல் வெளியீட்டு விழாவுக்கு ஆயிரக்கணக்கில் வந்து குவிந்து அரசியல் உலகத்தை திகைக்க செய்தவர்கள் கழக கண்ணின் மணிகள்; உங்களுக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்துவிடப் போகிறேன்?
அள்ளக் குறையாத அந்த அன்பில்தான் 32 ஆண்டுகளாக சோதனைப் புயல்களை தாங்கிக் கொண்டு எழுச்சி நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்.
எனது நாடாளுமன்ற உரைகள் தொகுக்கப்பட்டு நான்கு தொகுதிகளாக வெளியிடப்பட்டன.
இந்திய நாட்டின் வருங்கால நம்பிக்கைக்கு உரிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு ராகுல் காந்தி அவர்கள் வெளியிட, சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்திரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான திரு அகிலேஷ் யாதவ் எம்.பி. அவர்கள் முதல் படியைப் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் எனது உயிரனைய நண்பரும், காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான டாக்டர் பாரூக் அப்துல்லா, சிபிஎம் கட்சி பொதுச் செயலாளர் எனது நண்பர் தோழர் எம்.ஏ.பேபி, சிபிஐ கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் டி.ராஜா, ஆர்.எஸ்.பி. கட்சி... பொதுச் செயலாளர் என்.கே.பிரேமச்சந்திரன், மத்திய முன்னாள் நிதியமைச்சர் திரு ப.சிதம்பரம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், விஐடி பல்கலைக் கழக வேந்தருமான திரு ஜி.விஸ்வநாதன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சகோதரர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், குமுதம் வெளியீட்டகம் சார்பில் சங்கர் வி.சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.
மராட்டிய மாநிலத்தின் புகழ்மிக்க தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான திரு சரத்பவார் அவர்கள் தனது அருமை மகள், சுப்ரியா சுலே எம்.பி., அவர்களை அனுப்பி நேரில் வாழ்த்துக்களை கூறச் செய்தார். மேலும் சிவசேனா கட்சி முன்னணித் தலைவர் சஞ்சய் ராவுத் எம்.பி., பீகார் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முன்னணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் மனோஜ் குமார் ஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னணி தலைவர் முகமது பஷீர் எம்.பி., பெண் புலியாக நாடாளுமன்றத்தில் சீறும், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., மகுவா மொய்த்ரா மற்றும் சாகாரிகா கோஷ் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு எனக்கு வாழ்த்துக் கூறினர்.
மாநிலங்களவையில் எனது சகாவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவருமான தோழர் ஜான் பிரிட்டாஸ் எம்.பி., அவர்கள் என் வேண்டுகோளை ஏற்று நூல் வெளியீட்டு விழாவை சிறப்பாக நெறியாள்கை செய்து நம் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.
டெல்லியில் இந்த நூல் வெளியீட்டு விழா மிகுந்த சிறப்புடன் நடைபெறுவதற்கு ஒல்லும் வகை எல்லாம் துணை நின்று, துல்லியமாக திட்டமிட்டு செயலாற்றிய பெருமை நமது முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி அவர்களையே சேரும்.
கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஆருயிர் சகோதரர் சு.ஜீவன் மற்றும் அவரோடு பணியாற்றிய சென்னை கழக கண்ணின் மணிகள், டெல்லி மாநில அமைப்பாளர் பழனிக்குமார் உள்ளிட்ட அனைவரின் நன்றி பாராட்டக்கூடிய உழைப்பும் விழாவை சிறக்கச் செய்தது.
நாடாளுமன்றத்தில், ஆறு ஆண்டுகள் மக்களவையிலும், 24 ஆண்டுகள் மாநிலங்களவையிலும் மொத்தம் 30 ஆண்டு கால எனது ஆங்கில உரைகளை தொகுத்துத் தந்த என் தம்பி வை.இரவிச் சந்திரன் மகன் ராஜேஷ், அவற்றை நான்கு தொகுப்புகள் கொண்ட நூலாக ஆக்கித் தருவதற்கு அரும் பணியாற்றிய தாயகம் மேலாளர் கவி ஆகிய இருவரும் பாராட்டுக்குரியவர்கள். சர்வதேச வெளியீடுகள் தரத்தில் 'நாடாளுமன்றத்தில் வைகோ' நூலை தயாரித்து வெளியிட்டுள்ள 'குமுதம்' குழுமத்தின் தலைவர் பா.வரதராஜன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது நமது கடமை.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக டெல்லிக்கு நான் அழைத்த போதெல்லாம் ரயிலில், விமானத்தில் பயணம் செய்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற கண்ணின் மணிகள் இம்முறை நான் அழைக்காமலேயே ஆயிரக்கணக்கில் வந்து, குவிந்து டெல்லியை அதிர வைத்தீர்களே, எப்படி நான் நன்றி கூறுவேன்!
விஐடி பல்கலைக் கழக வேந்தர் திரு ஜி.விஸ்வநாதன் அவர்கள், "அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து டெல்லியில் நான் எம்.பி.,யாக இருந்திருக்கிறேன். திராவிட இயக்க வரலாற்றில் ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்கு டெல்லியில் மறுமலர்ச்சி திமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் வந்து கலந்து கொண்டது போல எப்போதும் நடந்ததில்லை. வைகோ அவர்கள் இப்படிப்பட்ட தொண்டர்களைப் பெற்றிருப்பது என்னைப் பெருமிதம் கொள்ள செய்தது" என்றார்.
மறுமலர்ச்சி திமுக தொண்டர்களின் பெருமையை அண்ணன் ஜிவி போன்றவர்கள் பாராட்டி கூறியது என் நெஞ்சுக்கு நிறைவாக இருக்கிறது.
செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாள் விழாவில் சங்கமிப்போம்! சரித்திரம் படைப்போம்! வாரீர்!
எழுச்சிச் சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்.
அன்புடன்
வைகோ







